கொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?

Posted on மார்ச் 27, 2020

0


என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?
படத்தின் காப்புரிமை Getty Images

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் செய்தித் தாள் விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளது. ஏற்கனவே விளம்பரங்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் செய்தித்தாள்கள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிலிருந்து மளிகை, பால், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி செய்தித்தாள்களின் விநியோகம் சிறிய அளவில் தடைபட்டது.

ஆனால், மார்ச் 26ஆம் தேதி முதல் பெரும்பாலான வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டது. மிகச் சில இடங்களில் நடைபாதைகளில் வைத்து செய்தித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மார்ச் 25ஆம் தேதியன்று செய்தித்தாள்களை இருசக்கர வாகனங்களில் கொண்டுசெல்லும் ஒருவரைக் காவல்துறையினர் தாக்கிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. இம்மாதிரியான சூழலில் பேப்பர்களை வீடுவீடாக விநியோகம் செய்யும் இளைஞர்கள் வேலைக்குவர மறுப்பதாக சென்னையில் செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் வேலாயுதம் என்பவர் தெரிவித்தார்.

செய்தித் தாள் நிறுவனத்திலிருந்து தங்களை செய்தித்தாள்கள் வந்தடைந்துவிட்டாலும், அவற்றை வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்க்க முடியாத நிலை இருக்கிறது என்கிறார் அவர்.

என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்?
படத்தின் காப்புரிமை Getty Images

இரு வாரங்களுக்கு முன்பாக கொரோனா நோய் இந்தியாவில் வேகமாகப் பரவ ஆரம்பித்ததிலிருந்து, செய்தித்தாள்களுக்கு வரும் விளம்பரம் வெகுவாகக் குறைந்தது. இதனால், தி ஹிந்து போன்ற முன்னணி செய்தித்தாள்களே இணைப்பிதழ்களை சில நாட்களுக்கு நிறுத்திவிட்டன. பக்கங்களின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அச்சடிக்கும் செய்தித்தாள்களை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதும் இயலாமல் போயிருப்பது இன்னும் பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

“ஒரு செய்தித்தாளை உருவாக்குவதில் பல மட்டங்களில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். செய்திகளைச் சேகரிப்பதிலிருந்து, அச்சடித்து விநியோகிப்பதுவரை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தேவை. செய்தியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றினால் போதுமெனச் சொல்லிவிட்டோம். ஆனால், செய்திகளை எடிட் செய்ய அலுவலகத்தில் ஆட்கள் தேவை. அச்சடிக்க, கடைகளுக்கு கொண்டு சேர்க்க ஆட்கள் தேவை. வீடுகளுக்கு விநியோகிக்க ஆட்கள் தேவை. ஆனால், அவர்கள் வந்து சேர்வதில் பிரச்சனை இருக்கிறது” என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம்.

என். ராம் (கோப்புப்படம்)
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

தில்லி போன்ற நகரங்களில் செய்தித்தாள் விநியோகம் கிட்டத்தட்ட முழுமையாக தடைபட்டிருக்கிறது. மும்பை நகரில் மார்ச் 23ஆம் தேதியிலிருந்தே செய்தித்தாள்களை அடித்து, வநியோகிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் செய்தித்தாள்களை அடிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டிருப்பதாக மஹாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாயுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தித்தாள் பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.

“பல ஊர்களில் டெலிவரி செய்யும் பையன்கள் பயப்படுகிறார்கள். போக்குவரத்து, வாசகர்களுக்கு செய்தித்தாளை கொண்டு சேர்ப்பது ஆகியவற்றில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறையையும் உள்துறையையும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறோம். ஆனால், சாலையில் இருக்கும் காவலர்தான் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை முடிவுசெய்கிறார்” என்கிறார் என். ராம்.

கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்தத்தினால், செய்தித்தாள்களுக்கு வரும் விளம்பரங்கள் மிகவும் குறைந்திருந்தன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்குப் பிறகு, சுத்தமாக விளம்பரமே இல்லாமல் போயிருப்பது செய்தித்தாள்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்கிறார்கள் செய்தித்தாள் உரிமையாளர்கள். இந்த ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே விளம்பரம் அளித்தவர்கள், விநியோகிஸ்தர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பதிலும் பிரச்னை உருவாகியிருக்கிறது.

இதற்கு நடுவில், செய்தித்தாள்களின் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்ற வாட்ஸப் செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “கொரோனா தொற்று உள்ளவர்கள் தொட்ட இடங்களை மற்றவர்கள் தொட்டால் எப்படி, பரவல் ஏற்படுமோ அதே போன்ற பிரச்சனை செய்தித்தாள்களுக்கும் இருக்கிறது. செய்தித்தாள்களால் அதிகம் பரவும் என்று சொல்வதற்கில்லை” என்கிறார் ராம். ஆனால், இம்மாதிரி தருணத்தில் இதுபோன்ற வதந்திகளைத் தவிர்க்க முடியாது என்கிறார் அவர்.

“எங்கள் விநியோகத்தில் சிறிய அளவில் பிரச்சனைகள் இருக்கின்றன என்றாலும் பெரிய பாதிப்பில்லை. Gated community போல இருக்கும் சில அபார்ட்மென்ட்களில் பேப்பர் போடுபவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. செய்தித் தாள் விநியோகத்திற்காகச் செல்பவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை, அதிகாரிகள் ஆகியோரிடம் பேசிவருகிறோம்” என்கிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னைப் பதிப்பின் ஆசிரியர்களில் ஒருவரான அருண் ராம்.

செய்தித்தாள்களைப் படித்தே ஆகவேண்டுமென்பவர்களுக்கு ஆன்லைனில் படிப்பது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில், இணைய இணைப்பு மோசமாக உள்ள பகுதிகளில் இது சாத்தியமில்லை. தவிர, தி ஹிந்து உள்பட பல செய்தித்தாள்கள் இணையத்தில் படிக்க கட்டணம் நிர்ணயம் செய்துள்ளன. இருந்தபோதும் கொரோனா பற்றிய செய்திகளை இலவசமாகப் படிக்கலாம்” என்கிறார் அவர்.

மும்பையில் நடந்ததைப்போல, தமிழ்நாட்டிலும் செய்தித்தாள்களை நிறுத்தும் வாய்ப்பிருக்கிறதா? “அப்படி நிறுத்தினால் நம் தோல்வியை நாமே ஒப்புக்கொள்வதைப் போலாகும். இந்தப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் செய்தித்தாள்கள் தொடர்ந்து வெளிவரும்” என்கிறார் ராம்.

இதற்கிடையில், ஏப்ரல் ஒன்றாம் தேதிவரை செய்தித்தாளை அச்சிடப்போவதில்லையென சென்னையிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று முடிவுசெய்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-52060776